வருசநாடு: மயிலாடும்பாறை அருகே கனமழைக்கு கோவில்பாறை கண்மாய் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பாறை கிராமத்தில் ‘கோவில்பாறை கண்மாய்’ உள்ளது. இந்த கண்மாய் கடந்த 40ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் கரைகளை மட்டும் அதிகாரிகள் பலப்படுத்தினர். ஆனால் கண்மாயை தூர்வாராமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கனமழையால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பாறை கண்மாய் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இனியாவது கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.