×

அடியார்களுக்கு மனஅமைதி அருளும் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர்

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் உள்ளது ரத்தினகிரீஸ்வரர் கோவில்.  சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் கோயில் அமைந்துள்ளது. 1017 படிகள் ஏறி மலை உச்சிக்கு  செல்ல வேண்டும். சுமார் 222 ஏக்கர் நிலத்தில் 4 கி.மீ சுற்றளவுடன்  இந்த மலை அமையப்பெற்று கம்பீரமாக நிற்கிறது. இந்த மலை மீது நின்று பார்த்தால்  திருஈங்கோய்மலை,  தோகைமலை, விராலிமலை நன்றாக தெரியும். குளித்தலை- மணப்பாறை மார்க்கத்தில் கோயில் அமையப்பெற்றது. பஸ் வசதி அடிக்கடி  உள்ளது. மூலவர் ரத்தினகிரீஸ்வரர், தாயார்சுரும்பார்குழலி.  தல விருட்சம் வேம்பு.  தீர்த்தம்- காவிரி தீர்த்தம்.

இயற்கை  எழிலுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம், சோதிலிங்க வடிவானது. மலைக் கொழுந்தாக எழுந்தருளியிருக்கும் பெருமான் சுயம்புலிங்க மூர்த்தியாக உள்ளார். சிவாய மலை, ரத்தினகிரி, வாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை, அய்யர் மலை, மாணிக்கமலை, தென்கயிலாயம், காகம் பறவா மலை என்னும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுகிறது. காலையில் குளித்தலை காவிரி கரையிலுள்ள கடம்பர் கோவிலில் வழிபாடு செய்து நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வழிபட்டால் புண்ணியமுண்டு.  எனவே தினமும் 8 கி.மீ.நடந்து  தீர்த்தம் எடுத்து வந்து  சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை சோம வாரங்களில் வழிபட்டால் மிகவும் மேன்மையானதென்பர்,  நாள்தோறும் காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைவன்  திருநீராடல் காண்கிறார்.

கார்த்திகை சோமவார விழா, பவுர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடு, சித்திரைத் தேர்திருவிழா இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள். கார்த்திகை 1ம் தேதி மாணிக்கம் பதித்த விலை உயர்ந்த கிரீடம்சூட்டி இறைவன் காட்சி தருவார்.மாதப்பிறப்புகள், தமிழ், ஆங்கில வருடப்பிறப்புகள், தீபாவளி, பொங்கல், சனிப்பெயர்ச்சி, பவுர்ணமி போன்ற நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. மணிமுடி இழந்த  ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும்போது இங்குள்ள கொப்பரையில் காவிரி தீர்த்தம் ஊற்றி  நிரப்ப முயன்றபோது  கொப்பரை நிரம்பவே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் தீர்த்தம் கொண்டு வந்து ஊற்றியும் கொப்பரை நிரம்பாததால்  கோபம் கொண்ட மன்னன் தனது வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் கொப்பளித்தது.  

இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான்.இறைவன் மன்னன் முன் தோன்றி அருளாசி வழங்கி ரத்தினங்களையும் வழங்கினார்.  அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் காணப்படுகிறது.ஆயர் ஒருவர் அபிஷேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பாலை காகம் கவிழ்த்ததால் அந்த காகம் எரிந்து போயிற்று. அப்படி கவிழ்ந்த எல்லைக்கு மேல் காகம் இப்போதும் பறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே, இம்மலைக்கு “காகம் அணுகாமலை” என்ற பெயரும் வழங்கலாயிற்று. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது.இங்கு அபிஷேகம் செய்த பால் சிறிதுநேரத்தில் தயிராக மாறி விடுகிறது.

தங்கள் குல தெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம்.  இங்கு இறைவனை வழிபட்டால் திருமணம் கைகூடும்.தொழில் விருத்தி,புத்திரபாக்கியம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மன அமைதி கிடைக்கும். எனவே நிம்மதிவேண்டி வரும் பக்தர்கள் அதிகம்.  மலைமேல் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகை செடிகள் காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, ரத்தகொதிப்பு, மூட்டுவலி போன்ற நோய்கள் தானாகவே குறைவதை உணர முடியும். சித்திரை மாதத்தில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியாக சிவலிங்கத்தின் மேல் விழுகின்றன. இம்மலையிலுள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. வறட்சி காலங்களில் சகுனக்குன்று விநாயகருக்கு பூஜை செய்தால் மழை பெய்கிறது. உள்ளூர்-, வெளியூர்களில் உள்ள பல வகுப்பினரும் இம்மலைமேற் பெருமானைக் குல தெய்வமாகக் கொண்டாடி வழிபடுகின்றனர்.

Tags : temples ,Shiva ,Rathinagreeswarar Temple , Rathinagreeswarar Temple, Shiva temples
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு