சென்னை: சாலையோர வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கடைகள் வழங்குவதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதனை பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது. இதன்படி, சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதனைத் தொடர்ந்து தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகளின்படி, நகர விற்பனை குழுவை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும் நகர விற்பனை குழு தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்த நகர விற்பனை குழுவின் தலைவராக மண்டல அதிகாரி செயல்படுவார். மண்டல செயற்பொறியாளர், இரு காவல் துறை அதிகாரிகள், என்ஜிஓ மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதை தவிர்த்து தெருவோர வியாபாரிகள் 6 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி தேர்தல் நடந்து 15 தொகுதிகளிலும் நகர விற்பனை குழு அமைக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து மண்டலங்களிலும் நகர விற்பனைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மண்டலத்தில் எந்த பகுதிகளில் தெருவோர வியாபாரிகளுக்கான விற்பனை மண்டலம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் தெருவோர வியாபாரிகள் சட்டத்தின்படி கடைகள் அனுமதி வழங்கும் போது அதில் எஸ்,எஸ்டி பிரிவினருக்கு இடஓதுக்கீடு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: தெருவோர வியாபாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு இதுவரை 24 ஆயிரம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 3 உள்ள வியாபாரிகள் அடையாள அட்டை கோரி விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் விண்ணப்பித்தால் அடையாள அட்டை வழங்கப்படும்.
15 மண்டலங்களில் உள்ள எந்த பகுதிகளில் தெருவோர வியாபாரிகளுக்கான விற்பனை மண்டலம் அமைப்பது தொடர்பாக அனைத்து பிரிவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. இதன்படி 6 மண்டலங்களில் விற்பனை செய்யும் பகுதி மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பகுதிகளை கண்டறியும் பணி முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள 9 மண்டலங்கள் இந்த பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் வியாபாரிகள் அனைவரும் இந்த மண்டலங்களுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். அப்போது எஸ்சி மற்றும் எஸ்டி வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும். மொத்த கடைகளில் 18 சதவீத கடைகள் இந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மெரினாவில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெயர், எத்தனை வருடம் கடைகள் நடத்திவருகின்றனர் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.