கொல்கத்தா: வருமான வரித்துறையின் சோதனைக்கு பயந்து, கொல்கத்தாவில் 6வது மாடியில் இருந்து 2000, 500 நோட்டுகள் ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் எம்கே பாயின்ட் அடுக்குமாடி பகுதியில் நேற்று முன்தினம் திடீரென வானத்தில் இருந்து பணமழை பெய்தது. அதாவது, 2000, 500 நோட்டுக்கள் கத்தை கத்தையாக வீசப்பட்டன. வானத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பறந்து வருவதை பார்த்த மக்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிலர் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை பிடிப்பதற்கு ஈடுபட்டனர். மேலும் சிலர் ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பவர்களை வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்த ரூபாய் நோட்டுக்கள் அடுக்கு மாடியின் 6வது தளத்தில் ஜன்னல் வழியாக வெளியே வீசப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 6வது தளத்தில் இயங்கி வந்த நிறுவனத்தில் வரி மோசடி நடப்பதாக வந்த புகாரின்பேரில் அங்கு சோதனை செய்வதற்காக சென்றனர். அதிகாரிகள் குழு சென்ற உடனேயே ஜன்னல் வழியாக நிறுவனத்தில் இருந்து கட்டு கட்டாக 2000, 500 நோட்டுகள் வெளியே வீசப்பட்டுள்ளது. இவை கணக்கில் வராத பணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “ வருவாய் புலனாய்வு அதிகாரிகள் குழு பிற்பகல் 2.30 மணிக்கு உள்ளே சென்றவுடன் 6வது தளத்தில் இருந்து சிலர் ரூபாய் நோட்டுக்களை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்தவுடன் அடுக்குமாடி அருகே திரண்டனர். 3.74 லட்சம் ரூபாய் பக்கத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது,” என்றனர். இந்த சம்பவம் குறித்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கருத்து கூறுவதற்கு மறுத்துவிட்டனர்.