புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் 10,000 ஆதிவாசி மக்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் அமைதி காக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘ஜார்க்கண்ட் மாநில அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் 10,000 ஆதிவாசிகள் மீது எந்த அரசாவது கடுமையான தேசத் துரோக வழக்கு பதியுமா? நமது தேசத்தின் மனசாட்சி ஊமையாகி விட்டதா? இது ஊடகத்தில் புயலை கிளப்பி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. விலைபோய் விட்ட ஊடகங்கள் பேசும் சக்தியை இழந்துவிட்டன. மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜார்கண்டில் 10 ஆயிரம் ஆதிவாசி மக்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 124ஏ-யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.