×

நாகை அருகே காதல் விவகாரத்தில் மகளை உயிருடன் எரித்து தாயும் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாகை: காதல் விவகாரத்தில் மகளை உயிருடன் எரித்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை அருகே வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உமாமகேஸ்வரி (48). இவர்களது 17வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இரண்டு பேரும் வீட்டை விட்டு சென்றனர்.  மாயமான மகளை பெற்றோர் கண்டுபிடித்து மயிலாடுதுறையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து சில நாட்கள் கழித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த வாலிபரை சந்தித்து இனிமேல் பேசக்கூடாது என்று பெற்றோர் கடுமையாக எச்சரித்தனர். பெற்றோர் பேச்சை கேட்காமல் அந்த வாலிபரை காதலித்து  வந்ததுடன், இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் சந்தித்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரண்டு பேரும் அங்குள்ள வயல் வெளியில் சந்தித்ததை உமாமகேஸ்வரி நேரில் பார்த்து கண்டித்தார். இது தொடர்பாக வீட்டில் இருவருக்கும் தகராறு நடந்தது. தந்தை கண்ணன், இருவரையும் சமாதானம் செய்துவிட்டு வெளியில் சென்று விட்டார்.  தனது மகளுடன் உமாமகேஸ்வரி படுத்திருந்த போது மீண்டும் இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த உமாமகேஸ்வரி, வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து மகள் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்தார். இரண்டு பேரும் உடல் கருகிய நிலையில் அலறல் சத்தத்துடன் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இரண்டு பேரையும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



Tags : love affair ,Naga ,hospital ,Woman Burns , நாகை, காதல் ,தற்கொலை முயற்சி, மருத்துவமனை
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...