சென்னை: குமரிக் கடல் பகுதி மற்றும் சென்னையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இடையில் இரண்டு புயல்கள் உருவான காரணத்தால் தமிழகத்தில் சில இடங்களில் வறண்ட வானிலை ஏற்பட்டது. அதனால் மழையும் குறைவாக பெய்யத் தொடங்கியது. தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று கடலூரில் 60மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் 50மிமீ, ஆலங்குடி 40மிமீ, சோழவந்தான், அம்பாசமுத்திரம் 30மிமீ, உசிலம்பட்டி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம், சீர்காழி 20மிமீ மழை பெய்துள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல் மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதுதவிர குமரிக்கடல் பகுதியில் மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது நாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை பரவியுள்ளது. அதற்கடுத்ததாக கொல்லம் பகுதியிலும் ஒரு காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வின் காரணமாக தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல, வங்கக் கடலில் ஆந்திரா மற்றும் சென்னை கடலோரப் பகுதியை ஒட்டிய கடலில் நெல்லூர்-சென்னை இடையேயும், சென்னை-புதுச்சேரி இடையேயும், புதுச்சேரி- நாகப்பட்டினம் இடையேயும் இணைக்கும் வகையில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும்.