சென்னை: திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மகளிர் அணி பொருளாளர் மல்லிகையரசி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் தரக்குறைவான வார்த்தைகளால் கடந்த 17ம் தேதி அன்று முதல் இன்று வரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்பேன் என்று சாதி வெறியை தூண்டும் வகையில் பதிவிட்டு வருகிறார். அவர் எங்கள் தலைவரை வெட்கங்கெட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்று தகாத வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.
அவர் தன்னை மதத்திற்காகவும், தேசத்திற்காகவும், மாய்த்துக்கொள்வேன் என்று கூறுவது அவர் சுய நலத்தோடு உள்நோக்கத்தோடும் சாதி வெறியை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவருடைய சுயநல கருத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேவலமாக முறையில் நடந்து கொண்டு வருகிறார்.எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.