×

அரிச்சல்முனை கடற்கரையில் தடுப்பை தாண்டி கடலுக்குள் இறங்கும் சுற்றுலாப்பயணிகள்

*விபரீதம் நடக்கும் முன் தடுக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியதால், சுற்றுலா வாகனங்கள் அரிச்சல்முனை வரை சென்று திரும்புகின்றன. கடல் சீற்றம் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனை சாலை வளைவு பகுதி கடல் அரிப்பில் சேதமடைந்து உடைந்து சரிந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் அரிச்சல்முனை செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை வளைவு பகுதி சீரமைக்கப்பட்டதால் மீண்டும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் அரிச்சல்முனை வரை சென்று திரும்புகின்றனர். இங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனை கடலில் இறங்கி கால்களை நனைத்து விளையாடுவது, நீந்திக்குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனால் சிறிய குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள் என பலரும் கடலில் மூழ்கி பலியான சம்பவங்கள் பல நடந்துள்ளது. போலீசாரும், மீனவர்களும் எவ்வளவு தடுத்தாலும், எச்சரித்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இதனையும் மீறி கடலில் இறங்குவதும் வழக்கமாக நடக்கிறது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் 2 கடலும் ஒன்று சேரும் இடத்தில், தற்போது அதிக நீரோட்டத்துடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. நேற்று அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளையும் தாண்டி பாறைகற்களில் நடந்து சென்று கடலுக்குள் இறங்கினர். இதனால் பாறைகளில் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கடலுக்குள் செல்லும்போது நீரோட்டத்தில் இழுத்து செல்லப்படும் அபாயமும் உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி விளையாடுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் என மீனவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : beach ,Arichalmunai ,Rameshwaram Arichalmunai ,sea , Rameshwaram ,Arichalmunai ,barrier ,sea, Dhanushkodi
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை