×

நெல்லை மாநகரில் தெருநாய்களை கொல்லும் கும்பல் ஊடுருவல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஐயப்ப சீசன் தொடங்கும் காலத்தில் தெருநாய்கள் அடிக்கடி கொல்லப்படுவது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக மாநகர பகுதிக்குள் நாய்களை கொன்று, அதன் தலையை மட்டும் கொய்து சென்று விடுகின்றனர். நாயின் பற்களை எடுத்து பாலீஷ் செய்து நரிப்பல், புலிப்பல் எனக்கூறி சிலர் விற்பனை செய்து வருகின்றனர். ஐயப்ப சீசன் நேற்று தொடங்கிய நிலையில், கடந்த ஒருவாரமாக நெல்லை மாநகர பகுதியில் நாய்களை இரும்பு தடி கொண்டு தாக்கி, உடலை சிலர் ரோட்டில் வீசி சென்றுள்ளனர். இந்த கொடூர செயலை தடுத்து நிறுத்திட வேண்டும் என பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல அமைப்பின் தலைவர் முகம்மது அயூப் கூறுகையில், ‘‘டவுன், பேட்டை பகுதிகளில் சமீபகாலமாக தொடர்ந்து நாய்கள் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு வருகின்றன. ரூ.100, 200க்காக நாய்களை கொலை செய்து, பல்லை பிடுங்கி செல்கின்றனர். சில இடங்களில் நாய்களை வெறித்தனமாக கொல்வதை பார்க்கும் பெண்களும், குழந்தைகளும் அதிர்ச்சி அடைகின்றனர். இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மாநகர காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பேட்டையில் 40 நாய்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தோம். அதற்குரிய நடவடிக்கை இல்லை. எனவே பொதுஇடங்களில் நாய்களை துன்புறுத்தி, கொலை செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் ’’ என்றார்.

Tags : paddy town , Paddy, Street Dog, Gang, Navigation
× RELATED இளம்பெண்ணை குத்தி கொன்ற 17 வயது சிறுவன்...