பெரம்பூர்: அயனாவரம் மார்க்கெட் பாலவாயில் தெருவில் தனியார் ஸ்வீட் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு வந்த ஒருவர்,200க்கு ஸ்வீட் வாங்கிவிட்டு 2 ஆயிரம் நோட்டை கொடுத்துள்ளார். கடை உரிமையாளர் மீதி பணத்தை கொடுத்தவுடன், அந்த நபர் அவசரமாக அங்கிருந்து சென்றார். சந்தேகமடைந்த கடை உரிமையாளர், அந்த நபர் கொடுத்த ரூபாய் நோட்டை பரிசோதித்த போது, அது கள்ளநோட்டு என்பது தெரிந்தது. உடனடியாக, கடை உரிமையாளர் அந்த நபரை விரட்டிச் சென்று, மடக்கி பிடித்து, அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அந்த நபர் ஓட்டேரி பாஷியம் ரெட்டி முதல் தெருவை சேர்ந்த ஏழுமலை (29) என்பதும், அவரடம் மேலும் அறு 2 ஆயிரம் நோட்டுகள் இருப்பதும் தெரிந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அவரிடம் எப்படி வந்தது. இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.