திருமலை: தெலங்கானாவில் ரயில்கள் மோதியதில் படுகாயமடைந்த இன்ஜின் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.தெலங்கானா மாநிலம், லிங்கம்பல்லியில் இருந்து கடந்த 11ம் தேதி பலுக்னுமா நோக்கிச்சென்ற புறநகர் ரயில், கச்சிக்குடா ரயில் நிலையம் வந்து 3வது பிளாட்பாரத்தில் நின்றது. அப்போது கர்னூலில் இருந்து செகந்திராபாத் நோக்கிச்சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் கச்சிக்குடா ரயில் நிலையம் வந்தது.இந்நிலையில், சிக்னல் கிடைப்பதற்கு முன்பே புறப்பட்ட புறநகர் ரயில் எதிரே வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. சிக்னல் வழங்குவதற்கு முன்பே புறநகர் ரயிலை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்தில் ரயில் இன்ஜினில் சிக்கிக் கொண்ட புறநகர் ரயிலின் இன்ஜின் டிரைவர் சந்திரசேகர்(30), 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு படுகாயத்துடன் மீட்கப்பட்டார். உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வலது காலில் ரத்தம் சரிவர செல்லாமல் அவரது கால் செயலிழந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்து சந்திரசேகரின் காலை அகற்றினர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.