×

அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி தமிழக தலைவர்கள் கருத்து

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் கொத்தபய ராஜபக்சே வெற்றி குறித்து தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.வைகோ(மதிமுக பொது செயலாளர்): இலங்கை அதிபர் தேர்தலில் சிங்கள வெறியர்கள் மத்தியில், வெறித்தனத்தை ஊட்டி வருகின்ற கோத்தபய ராஜபக்சே கூட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. அதே நேரத்தில் தமிழர்கள்  தங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தையும், ஏற்பட இருக்கின்ற ஆபத்தையும் எண்ணி தங்களை பாதுகாத்துக்கொள்ள எது நல்லது என்பதைப் பற்றி தீர்மானித்தற்காக இந்த வேதனையான நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.  படுகொலைகளைச் செய்து, கோர நர்த்தனமாடிய கொலைபாதகன்தான் கோத்தபய ராஜபக்சே. எனவே இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள். எதிர்காலத்தில் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க  வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. தலைவர்): ஈழ இனப்படுகொலைக்கு தொடர்புடைய குற்றவாளியான கோத்தபய ராஜபக்‌சே பெற்றுள்ள வெற்றியானது நீதி விசாரணைக்கு மேலும் முட்டுக்கட்டை போடுவதோடு தமிழர்களுக்கு மிகப்பெரிய  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது தேர்தல் பிரசாரத்தின் போதே,  இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையத்துடன், முந்தைய இலங்கை அரசுகள் செய்து கொண்ட  ஒப்பந்தங்கள் எதையும்  செயல்படுத்த மாட்டோம். போர்க்குற்றச்சாட்டுகளில்  சேர்க்கப்பட்ட ராணுவத்தினர் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கோத்தபய ராஜபக்‌சேவின் வெளிப்படையாக அறிவிப்பு செய்தார். இலங்கை இனப்படுகொலை  விவகாரத்தில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சீனா மறைமுகமாக உதவியது என்ற குற்றச்சாட்டும் உள்ளதால், கோத்தபய ராஜபக்சே வெற்றியானது இந்தியாவையும் பல்வேறு வகைகளில் பாதிக்கும்.


Tags : Gotabhaya Rajapaksa ,leaders ,election ,Tamil , Gotabhaya Rajapaksa ,presidential ,election Tamil
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...