சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது விசாரணையில் உள்ள நிலையில் மத்திய உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் சுப்ரமணியன் நேற்று சென்னை வந்தார். பின்னர் அவர் ஐஐடி வளாகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார். அதற்கு பிறகு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பாத்திமா தற்கொலை விவகாரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறப்பு வாய்ந்த சென்னை ஐஐடியில் ஆய்வுகள் மேற்கொண்டதுடன், அங்கு நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். ஐஐடியில் வளாகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து கேட்டறிந்தேன். அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் உள்ள பணியாளர்களுடன் பேசினேன்.
ஐஐடியின் ஒரு சிறந்த மாணவியை நாம் இழந்துவிட்டோம் என்பதில் வருத்தமாக இருக்கிறது. திறமையான அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து புலனாய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் மூலம் உண்மை நிலை வெளியில் தெரியவரும். இது குறித்து தற்போது விசாரணை நடந்து வரும் வேளையில் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், புலனாய்வுக்கு தடையாக எந்த விதமான வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய இணைச் செயலாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.