×

நீளமான பெயரா...? புதிய சிக்கல்...: குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முன்னர் யோசிங்க...

சிறப்பு செய்தி: குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது ஆங்கிலத்தில் பதிவு செய்ய 34 எழுத்துகள், தமிழில் 45 எழுத்துக்கள் எழுதும் வகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பின்போது இடம் ஒதுக்கப்படுகிறது.அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவ மாணவியர் பெயர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்  மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் பதிவு செய்ய 34 எழுத்துகள் எழுதும் வகையிலும், தமிழில் பதிவு செய்ய 45 எழுத்துகள் எழுதும் வகையிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெயர் முதலிலும், அதனை தொடர்ந்து தலைப்பெழுத்தும்  இடம்பெறும் வகையில் மாணவரது பெயர் இருக்க வேண்டும். பெயருக்கும் தலைப்பெழுத்திற்கும் (இனிஷியல்) இடையே ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருத்தல் வேண்டும். அதில் புள்ளி வைக்க கூடாது. இரு தலைப்பு எழுத்துகள் இருப்பின்  இரு தலைப்பு எழுத்துகளுக்கு இடையே ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும்போது தலைப்பெழுத்து தமிழில் இருக்க வேண்டும்.

அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலைபெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் பிறந்த சான்றிதழுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிய வேண்டும். தேர்வர்கள் மார்ச் 2020 முதல் நாள் (01.03.2020) அன்று கண்டிப்பாக 14 வயது நிறைவு செய்தவர்களாக இருத்தல்  வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் பிறந்த தேதி மாற்றம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. பிறப்பு சான்றிதழ் இல்லை என தெரிவிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து மாணவரின் பெயர்  (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு கடிதம் எழுதி வாங்கிய பிறகு அதன் அடிப்படையில் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். 10ம் வகுப்புபொதுத்தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களும்  பகுதி-1ல் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாக எழுத அனுமதிக்கப்படுவர்’ என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாணவ மாணவியர் பெயர்கள் ஓரளவு நீளமாக இருந்தாலே அதனை 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்னர் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்து அரசிதழில் அதனை வெளியிட்டு திருத்தப்பட்ட புதிய பெயரை அதனை  பள்ளிகளில் ஒப்படைக்கும் வழக்கத்தை பெற்றோர் வைத்துள்ளனர்.

சிலர் தந்தை பெயர், தாயார் பெயர் இரண்டையும் இனிஷியலாக வைத்துவிடுகின்றனர். இது ஆதார் அட்டையில் வரும்போது இருவரது பெயர்களையும முழுநீள பெயர்களாகவும், தொடர்ந்து மாணவர் பெயரும் இடம்பெறுகிறது. இனிஷியலை  நடுவிலும், கடைசியிலும், முன்பாகவும் போடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பெயர் முதலிலும் தலைப்பெழுத்து எனப்படும் இனிஷியலை கடைசியிலும் போட வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போதே சுருக்கமாக அழகான பெயர்களை வைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.நீண்ட பெயர் ஸ்வீடனில் வசிக்கின்ற அலெக்சாண்டர் என்பவர் தனது பெயரை 63 வார்த்தைகள் கொண்டதாக அமைத்திருந்தார். இவர் தான் உலகிலேயே நீளமான பெயரை கொண்டவர். 29 வயதான இவர் 6 முறை தனது பெயரை மாற்றியுள்ளார்.

Tags : Long name, New Problem, name
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...