சென்னை: அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இன்று தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சத்தின் கீழ் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை அமைந்துள்ளது. இந்த மருத்துவ முறையில் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்தெந்த மருத்துவமுறைகள் ஆரம்பிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி 2018ம் ஆண்டு முதல் நவம்பர் 18ம் தேதி இயற்கை மருத்துவ தினமாக இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இத்தினமானது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் நோய்களைத் தடுப்பதற்காக மருந்தில்லா மருத்துவ அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய மன்றமானது நவம்பர் 14 முதல் நவம்பர் 18 வரை மருத்துவ முகாம்கள், பயிலரங்கம் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்தி வருகிறது. மேலும், கடந்த ஆண்டு சமூக மண் குளியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் ஒரே நேரத்தில் 700 நபர்கள் மண் குளியலை மேற்கொண்டனர். அதன்படி இந்த ஆண்டு அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் தேசிய இயற்கை மருத்துவ தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று மக்களிடையே யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சைகளான உபவாச சிகிச்சைகள், யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நீராவி குளியல், வாழை இலை குளியல், மண்குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, சூரிய குளியல், இயற்கை உணவு சிகிச்சை, நறுமண சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை போன்றவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதைப்போன்று தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட மருத்துவமனையிலும் கொண்டாடப்படுகிறது.இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் ஏற்படும் சந்தேகங்களை பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ளும், உணவு கண்காட்சிகளும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.