சென்னை: நெல்லை மாவட்டம், கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (31). திருப்பதியில் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இவரது தலைமை அலுவலகம் சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ளதால், தனது மேலாளரை சந்தித்து சம்பளம் வாங்க சென்னை வந்தார்.
அதன்படி, சம்பளத்தை வாங்கிக்கொண்டு, சொந்த ஊர் செல்ல, அருகில் உள்ள கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, 2 வாலிபர்கள் திடீரென பிளேடு மற்றும் கத்தியால் மாரிமுத்துவின் கழுத்து, கை போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த 18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் 10,500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசார் அந்த மர்மநபர்களை விரட்டி சென்று ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்து, எழும்பூர் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.