சென்னை: ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடப்படவில்லை என்று பொய் வழக்கு தாக்கல் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் சுந்தர விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஜெய என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘செம்பியம் பகுதியில் பொது பாதையில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் தண்ணீர் வராததால், பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளன. அதேநேரம் அந்த ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடவில்லை. பிளைவுட் மற்றும் கான்கிரீட் போட்டு மேலோட்டமாக மூடப்பட்டுள்ளது. எனவே, மணப்பாறை சுஜித் மரணம் போன்ற துயர சம்பவம் சென்னையிலும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னை மாநகராட்சி ஆணையர், மனுதாரர் கூறும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதன்படி, மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரர் தனிப்பட்ட பிரச்னையின் காரணமாக சிலருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது’ என்று கூறியிருந்தார். இதையடுத்து மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.