×

சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் நிறுவன ஊழியரை கடத்திய சர்வதேச தங்கம் கடத்தல் கும்பல் : விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் நிறுவன ஊழியரை மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்றனர். அவரை எதற்காக தங்கம் கடத்தல் கும்பல் கடத்தி சென்றது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரைச் சேர்ந்தவர் தணிகைவேல் (33). இவர் சிங்கப்பூரில் வேலை செய்துவந்தார். கடந்த 14ம் தேதி அதிகாலை ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை வந்து கடலூருக்கு வருவதாக அவரது தந்தை கலியமூர்த்திக்கு தணிகைவேல் ஏற்கனவே தகவல் கூறியிருந்தார். எனவே மகன் வருவார் என எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அவர் 14ம் தேதி மாலை வரை வரவில்லை. தணிகைவேலின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் தணிகைவேல் வேலை செய்த நிறுவனத்தில் தொடர்பு கொண்டபோது அவர் திட்டமிட்டபடி கிளம்பிச்சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அன்று மாலை அவரது தந்தைக்கு ஒரு போன்வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, ‘‘உங்கள் மகன் எங்களிடம் தான் இருக்கிறான் நாங்கள் தான் அவனை கடத்தி கொண்டு வந்துள்ளோம். சிங்கப்பூரில் எங்களுடைய நண்பர் ஒருவர் எங்களிடம் தரும்படி அவனிடம் 30 சவரன் நகைகளை கொடுத்தனர். ஆனால் அவன் அந்த நகைகளை எங்களிடம் தரவில்லை. உங்கள் மகன் நகையை எங்கோ மறைத்து வைத்திருக்கிறான். உங்கள் மகனை விடுவிக்க வேண்டுமென்றால் அந்த நகைக்கு உரிய தொகையான 10 லட்சம் கொடுங்கள் இல்லாவிட்டால் உங்கள் மகனை கொன்று விடுவோம். போலீசாரிடம் சென்றால் உங்கள் மகனை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது. போலீசாரிடம் செல்ல முயன்று உங்கள் மகனை இழந்துவிடாதீர்கள்’’ என்று மிரட்டி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர்,

இதுகுறித்து கலியமூர்த்தி சென்னை விமான நிலையத்தில் புகார் செய்தார். விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடினர். கலியமூர்த்திக்கு வந்த செல்போனை ஆய்வு செய்தபோது அது கடலூரில் இருப்பது தெரியவந்தது. விமான நிலைய போலீசார் கடலூர் போலீசாரின் உதவியுடன் கடத்தல் ஆசாமியை தேடினர். இந்நிலையில் கலியமூர்த்திக்கு நேற்று காலை மீண்டும் அதே செல்போனில் இருந்து போன் வந்தது. கடத்தல் ஆசாமிகள் 10 லட்சம் கேட்டு மிரட்டினர். ஆனால் கலியமூர்த்தி தன்னிடம் 10 லட்சம் இல்லை. 7 லட்சம் தருவதாக கூறினார். உடனே கடத்தல் ஆசாமிகள் கடலூரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணத்தை வைத்துவிட்டு செல்லும்படி கூறினர். அதன்படி பணத்தை எடுத்துக்கொண்டு கடத்தல் ஆசாமிகள் கூறிய இடத்தில் பணத்தை வைத்தனர். அதை எடுக்க வந்த கடத்தல்காரர்களின் கூட்டாளி ஒருவனை மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவனிடம் தணிகைவேல் குறித்து விசாரிக்கின்றனர். இதேபோல் கடந்த வாரம் தங்கம் கடத்தி வந்த இரண்டு பெண்களை கடத்தல் ஆசாமிகள் சுங்க அதிகாரிகளிடம் இருந்து கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை பறித்துவிட்டு சாலையில் விட்டுச்சென்றனர். சென்னை விமான நிலையத்தில் ஆள்கடத்தல் சம்பவம் தொடர்கிறது.

Tags : gang ,company ,Singapore ,airport , International gold smuggling gang ,private company employee , Singapore
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....