×

தீர்ப்பாய நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி உறவையூரி கிராமத்தில் ஏ அண்ட் எப் என்ற ஷூ தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் பணியாற்றிய பலருக்கு கடந்த ஜூலை 2000லிருந்து 2001 நவம்பர் வரை பிராவிடண்ட் பண்ட் பணத்தை நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து, அந்த தொழிலாளர்களுக்கான பிராவிடண்ட் பணத்தை கட்டுமாறு பிஎப் உதவி ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, நிறுவனம் மண்டல ஆணையரிடம் மேல் முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த மண்டல ஆணையர் உதவி ஆணையரின் உத்தரவை உறுதி செய்தார். இதையடுத்து, நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள்தான், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில், ஊழியர்களுக்கு பிஎப் பணத்தை வழங்க வேண்டும் என்ற மண்டல ஆணையரின் உத்தரவு சரிதான். எனவே, நிறுவனம் அந்த பணத்தை ஊழியர்களின் பிஎப் கணக்கில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக வக்கீல்கள் வாதத்தின்போது தெரிவித்துள்ளனர். இப்படி காலதாமதம் ஏற்படுவதால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தொழிலாளர் தீர்ப்பாயங்கள் அமைத்ததின் நோக்கமே தொழிலாளர்களின் நலனுக்காகத்தான். வழக்குகளை தீர்ப்பதில் கால தாமதம் ஏற்பட்டால் நிறுவனங்களின் சுமையும் அதிகரிக்கும். அவர்களும் பணப்பலன்களை கூடுதலாக தரவேண்டிய நிலை ஏற்படும். வக்கீல்களும் அடிக்கடி வழக்குகளை தள்ளிவைக்க கோருவதும் வழக்குகள் தேக்கத்திற்கான காரணமாக உள்ளது. இதனால் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்களின் வழக்குகள் முடிவடைந்து அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : proceedings ,Madras High Court ,Tribunal ,Center , Tribunal should investigate, pending cases
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...