×

ப.சிதம்பரம் மனு காப்பி, டி.கே.சிவக்குமார் மனுவில் பேஸ்ட் இப்படிக்கா எடுத்து அப்படிக்கா போட்ட அமலாக்கத்துறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி

புதுடெல்லி: அரசு அதிகாரிகள் லீவ் லெட்டரை எழுத சோம்பேறித்தனப்பட்டு, கம்ப்யூட்டர் ஒருவர் எழுதியதை அப்படியே காப்பி செய்து, மற்றவர்கள் பேஸ்ட் செய்து பெயரை மட்டும் மாற்றி அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.  ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த ‘காப்பி அண்ட் பேஸ்ட்’ முறையை கையாண்டு, நீதிபதிகளை கடும் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர்.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.  இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், பணமோசடி வழக்கில் கடந்த செப்டம்பரில் கைது  செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி சிவக்குமார் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இதையடுத்து, சுமார் 50 நாட்களுக்கு பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியேறினார்.

எனினும், சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் நாரிமன் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருந்த வாதங்களை மாற்றாமல், அப்படியே ‘காப்பி - பேஸ்ட்’ செய்து  டி.கே.சிவக்குமாரது வழக்கில் மனுத் தாக்கல் செய்துள்ளதை பார்த்து நீதிபதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அமலாக்கத்துறையின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி  செய்த நீதிபதிகள், சிவக்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உறுதிப்படுத்தியும் உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவரை மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னர் எம்எல்ஏவாக இருந்த சிவக்குமார், மாநில நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை அமைச்சராகவும் மட்டுமே இருந்தார். ஆனால், அமலாக்கத்துறை தாக்கல் செய்த ‘காப்பி - பேஸ்ட்’ மனு குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் செய்து பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags : PC Chidambaram ,DK Sivakumar ,Supreme Court ,judges , Supreme Court judges: dissatisfaction with Supreme Court
× RELATED பாஜ அமைச்சர் பிரகலாத் ஜோஷியை...