×

மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி

இஸ்லாமாபாத்: இந்திய பயணிகள் விமானத்தை, பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி காப்பாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் நோக்கி 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பாகிஸ்தானின் கராச்சி வான் எல்லைக்குள் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் மின்னல் காரணமாக 36,000 அடி  உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 2,000 அடி இறங்கி 34,000 அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, மோசமான வானிலை  நிலவுவதை எடுத்து கூறினார்.

இதைத் தொடர்ந்து, கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாகிஸ்தான் வான்வழியில் இருந்து விலகி, அந்த விமானம் சரியான பாதையில் பயணிக்க பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி  உதவினார். இந்தியா-பாகிஸ்தான் இடையில் கடந்த பிப்ரவரியில் நடந்த பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் தனது வான்வழிகளை மூடிவிட்டது. 5 மாத இடைவெளிக்கு பின்னர், கடந்த ஜூலை 16ம் தேதிதான், அதன் வான் எல்லை இந்திய  விமானங்களுக்கு திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடற்படை பயிற்சி விமானம் விபத்து: கோவாவில் தாபோலிம் அருகே உள்ள கன்சா கடற்படை தளத்தின் `மிக்’ பயிற்சி விமானம் நேற்று வழக்கமான பயிற்சியின் போது, அருகில் இருந்த கிராமத்தில் விழுந்து  திடீரென விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த  விமானிகள் இருவரும் அதிர்ஷ்ட வசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்தனர். இவர்களின் நலன் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.



Tags : Pakistani ,Indian , Pakistani official rescues Indian passenger plane
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி