×

வாகன சோதனையின் போது 10 லட்சம் குட்கா, 2 வேன் பறிமுதல்

புழல்: சோழவரம் அருகே வாகன சோதனையின் போது, 10 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 2 வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை அழிஞ்சிவாக்கம் பகுதியில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 மினி வேன்கள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வேகமாக வந்தது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த 2 வேன்களையும் தடுத்து நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து 3 பேர் தப்பி ஓடினர்.

வேனில் இருந்த டிரைவர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த அசோக்குமார் (28), கவரைப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (22) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 2 வேன்களையும் சோதனை செய்தபோது, 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிந்தது இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. குட்காவுடன் 2 வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்து, சோழவரம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது, தப்பியோடியவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : vehicle test , 10 lakh kutka, 2 van seized , vehicle test
× RELATED திருமங்கலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை