வேளச்சேரி: புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு, வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதுகுறித்து புகாரின் பேரில், கொள்ளையர்களை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் பகலவன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் பெற்று விசாரித்தனர். அதில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராஜா (எ) பூபதி ராஜா (25), பிரசாந்த் (25) ஆகிய இருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. வாகன பதிவு எண் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து, விடுதி ஒன்றில் தங்கி இருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 80 சவரன் நகை, லேப்டாப், பைக் மற்றும் வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான பூபதி ராஜா மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இவர், ஜாமீனின் வெளியே வந்தவுடன், பிரசாந்த் என்பவருடன் சேர்ந்து, விடுதிகளில் தங்கி வேளச்சேரி, சைதாப்பேட்டை, தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்று, அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் “ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க 5 முதல் 7 நிமிடங்களே போதும். அதற்குள் வேலையை முடித்து விடுவோம்” என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இருவர் மீதும் வழக்குபதிவு செய்த வேளச்சேரி போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த வேளச்சேரி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மனோகர், மற்றும் தலைமை காவலர் தாமோதரன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.