ஆவடி: ஏலச்சீட்டு பணத்தை வழங்காமல் மோசடி செய்த வழக்கில் நிதிநிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், அம்பத்தூர், மேனாம்பேடு, இந்திராநகரை சார்ந்த ஜாவித் (29) என்ற தனியார் நிறுவன ஊழியர், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டுக்காக மாதம் ரூ.5 ஆயிரம் என சில மாதங்கள் கட் டியுள்ளார். மேலும், தொடர்ந்து பணம் கட்ட முடியாததால் ஏற்கனவே கட்டிய ரூ.43,820 ஐ திரும்ப கேட்டுள்ளார். ஆனால், நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணத்தை தர முடியாது என கூறி ஜாவித்துக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜாவித் திருமுல்லைவாயல் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, எஸ்.ஐ விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், மேற்கண்ட நிதி நிறுவனம் ஜாவித் உள்பட சிலரிடம் ரூ.7லட்சம் வரை பணம் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நிதி நிறுவன ஊழியர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், ஏலவாடி கிராமத்தை சேர்ந்த மணி (31), சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கும்பிடிமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் ஆல்பிரிம் பென்ஜமின் பீட்டர், பொதுமேலாளர் தமிழ்செல்வி, அலுவலக மேலாளர் ராதிகா உள்ளிட்ட மூன்று பேரை தீவிரமாக தேடுகின்றனர்.