புதுடெல்லி: வங்கி டெபாசிட்களுக்கான 1 லட்சம் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். வங்கி டெபாசிட்கள் அனைத்தும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தின் காப்பீட்டில் உள்ளன. இதன்படி, ஒரு வங்கி திவாலாகும் பட்சத்தில் அதில் வாடிக்கையாளர் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்திருந்தாலும், அதிகபட்சம் 1 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற விதிமுறை தற்போது உள்ளது. சமீபத்தில், பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஊழல் நடந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வங்கி டெபாசிட்களுக்கான 1 லட்சம் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க புதிய சட்ட மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.’’ என்றார். தொலைபேசி சேவை நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தில் இயங்குவது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘எந்த நிறுவனமும் மூடப்பட வேண்டுமென நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் வளம் பெறவே விரும்புகிறோம்’’ என்றார்.