×

கூரையை பிரித்து இறங்கி திருடி விட்டு தப்ப முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த மளிகைக்கடைக்காரர் கைது

காங்கயம்: காங்கயத்தில் மளிகைக்கடையின் கூரையை பிரித்து திருடி விட்டு தப்ப முயன்ற திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்த  மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் காங்கயம் நகரில் பழைய கோட்டை சாலையில்  மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி வழக்கம்போல இரவு கடையை பூட்டிவிட்டு பணியாட்கள் அனைவரும் சென்று விட்டனர். அன்று இரவு ஒரு மணியளவில் ஒரு நபர் கடையின் கூரையை பிரித்து உள்ளே இறங்குவதை சி.சி.டி.வி. கேமரா மூலம் வீட்டில் இருந்தபடியே சுேரஷ்  பார்த்துள்ளார். உடனடியாக அவர் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து கடையை திறந்து பார்த்தனர். அப்போது  கடையின் உள்ளே இருந்த சுமார் ₹15 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டலை தூக்கி கொண்டு பிரிக்கப்பட்ட கூரை  வழியே  மேலே ஏறி தப்ப முயன்றார். அந்தநேரத்தில் அவர் தவறி கீழே விழுந்தார்.

அவரை சுரேஷ் மற்றும் பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை மீட்டு  காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மளிகைக்கடையில் திருடியவர்  விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா சாமிபுரம் காலனியை  சேர்ந்த செல்வராஜ்(43) என தெரிய வந்தது. அவரை கட்டையால் கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாக, கடையின் உரிமையாளர் சுரேசை போலீசார் கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைத்தனர்.

Tags : Grocers , Thief, Grocery Store, Arrested
× RELATED காட்டு யானைகள் அட்டகாசம் மளிகைக்கடையை சூறையாடியது