புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்தாண்டு நவம்பருக்குள் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் முழு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அடுத்தாண்டு நவம்பரில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பல குழுக்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இவற்றில் 3 துணைக் குழுக்கள் கடந்த அக்டோபரில் இருந்து 4 உயர்நிலை கூட்டம் நடத்தியுள்ளது.
இம்முறை நிலவில் தரையிறக்குவதற்கான இடம், நேவிகேஷன் போன்ற அம்சங்களை இஸ்ரோ கவனமாக ஆராய்ந்து வருகிறது. கடந்த முறை அதிவேகத்தில் லேண்டர் தரையிறக்கும்போது அதன் கால்கள் உடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதனால், இந்த முறை அனுப்பப்டும் லேண்டரில் வலுவான கால்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திராயான்-3 விண்கலத்தில் ஆர்பிட்டர் இல்லாமல் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.