திருப்பூர்: திருப்பூரில் சமூக வலைதளங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், போலீசார் குறித்து அவதூறுகளை திருப்பூரை சேர்ந்த சிலர் விடியோ மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனை பார்த்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, மாநகர குற்றப்பிரிவிலும், தாராபுரம் மாஜிஸ்ட்ரேட் சசிகுமார் மாவட்ட குற்றப்பிரிவிலும் கடந்த மாதம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு மைய நிர்வாகிகளான திருப்பூர் நாஞ்சில் கிருஷ்ணன் (50), தாராபுரம் வித்யா (28), உடுமலை ராம்மோகன் (41) ஆகியோரை கடந்த 4ம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கைதான 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.