சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சென்னை சாந்தோமில் உள்ள புனித பீட்ஸ் மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: கேரள மாநில அரசு, அங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக 10 நிமிட நேரம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாட வேளைகளின் இடைவெளியில் மாணவர்கள் குடிநீர் அருந்தினால் அவர்கள் உடல் நலம் மேம்படும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று, தமிழகத்திலும் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்்வொரு பாட வேளைக்கும் இடைவெளியில் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிட நேரம் ஒதுக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.