சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம், ஹவாலா பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பையில் இருந்து நள்ளிரவு 9.30 மணிக்கு வரும் ஏர் இந்திய விமானத்தில் தங்கத்தை ஒருவர் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பையை சேர்ந்த தீபன் (33) என்பவரை விசாரித்தனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அவர் வைத்திருந்த பிரீப்கேசை உடைத்தபோது அதில் 6 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 1 கிலோ 190 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ரூ.43.7 லட்சம். அவர் கைது செய்யப்பட்டாார்.
2வது ரெய்டு: மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயாரானது.அப்போது, திருவாரூரை சேர்ந்த சையத் இப்ராகிம் (36), விருதுநகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகியோரது டிராவல் பேக்குகளை ஸ்கேன் செய்தபோது, கடத்தல் பொருட்கள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.அந்த டிராவல் பேக்குகளை ஆய்வு செய்தபோது, அதன் அடிபாகத்தில் ரகசிய அறை இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, ஆஸ்திரேலியா நாட்டு பணம் இருந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.45.4 லட்சம். அது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம், ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.