×

2 நாட்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை குடிநீர் வாரிய அலுவலகம் முற்றுகை: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர், அனந்தநாயகிநகர் ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரியிடம்  புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர்நகர் பகுதி வழியாக ஊர்வலமாக சென்று கொருக்குப்பேட்டை கே.என்.எஸ் டெப்போ அருகேயுள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வந்த சென்னை 4வது மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஏழுமலை சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags : Office Siege , Drinking water, drinking water board office, siege, korukkupettai
× RELATED ஆட்டோவை பறிமுதல் செய்ததில் டிரைவர்...