திருவனந்தபுரம்: குருவாயூர் கோயில் உண்டியலில் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் பிரசித்திப் பெற்றது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஏற்கனவே இந்த கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் கோயில் அருகே உள்ள உண்டியலை திறந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அதில், 1.5 செ.மீ. நீளமுள்ள ஒரு துப்பாக்கி குண்டு கிடந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த குருவாயூர் போலீசார் துப்பாக்கி குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது 9 எம்எம் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு ஆகும். இதை யார் உண்டியலில் போட்டார்கள் என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.