சிவகங்கை: நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சரியா வராது. விஜயகாந்த் கட்சியே அப்படி, இப்படி ஆச்சு என சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்துள்ளார். இது கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடந்த விழாவில், காதி கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் நேற்று கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிவகங்கையில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் உள்ளாட்சி தேர்தலுக்குள் முடிவடையும். காரைக்குடியை தனி மாவட்டமாக பிரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள்.
உங்களுக்கு தெரியாதது இல்லை. விஜயகாந்த் கூட கட்சி ஆரம்பித்தார். அதெல்லாம் அப்டி, இப்டி ஆயிருச்சு. இனிவரும் காலங்களில் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அதெல்லாம் சரியா வராது’’ என்றார். அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இருக்கும் நிலையில் அவரது கட்சியின் நிலை குறித்து, அமைச்சர் பாஸ்கரன் விமர்சனம் செய்திருப்பது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் நேற்று முன்தினம் நடந்த இலவச லேப்டாப் வழங்கும் விழாவில், ‘செல்போனை கண்டுபிடிச்சவங்களை தூக்கிப்போட்டு மிதிக்கணும்’ என பேசிய அமைச்சர் பாஸ்கரன், அடுத்தநாளே கூட்டணிக்கு வேட்டு வைப்பது போல கருத்து வெளியிட்டுள்ளார்.