பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அர்த்தநாரிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்தது. சேத்துமடை மற்றும் நவமலை, அர்த்தனாரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் 4 பேரை தாக்கி கொன்றது. வீடுகளுக்குள் புகுந்து ரேஷன் அரிசியை தின்றதால் யானைக்கு ‘அரிசி ராஜா’ பெயரிட்டு பிடிக்க அர்த்தனாரிபாளையம் பகுதியில் 2 கும்கி யானைகளுடன் இரவு பகலாக வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலையில், 10 பேர் கொண்ட குழுவினர் 4 பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், யானை டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இருப்பினும், யானையை எப்படியாவது பிடித்து வரகளியாறு பகுதியில் விட வேண்டும் என்ற நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.