திருவனந்தபுரம்: திருச்சூரில் தேர்வு எழுதாமல் இருப்பதற்காக 4 மாணவர்கள் தாங்களாகவே கையை முறித்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியில் 9ம் வகுப்புக்கு தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 மாணவர்கள் கையில் கட்டுடன் பள்ளிக்கு வந்தனர். இது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது ஒருவர் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும், இன்னொரு மாணவன் விளையாடும்போது கை முறிந்ததாகவும், மற்றவர்கள் பஸ்சில் இருந்து விழுந்ததில் கை முறிந்ததாகவும் கூறினர்.
மாணவர்களின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இது தவிர ஒரே நேரத்தில் 4 பேருக்கு கை முறிந்தது ஆசிரியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். இதில் தேர்வு எழுதாமல் இருப்பதற்காக தாங்களே தங்கள் கையை முறித்துக்ெகாண்டது தெரியவந்தது. கூகுளில் வீடியோவை பார்த்து மாணவர்கள் கையை முறித்துக் கொண்டதும் ஆசிரியர்களின் விசாரணையில் தெரியவந்தது. இதை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கவும், தவறான முடிவு எடுப்பதை தடுக்கவும் கவுன்சலிங் கொடுக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.