×

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலைக்கு பேராசிரியரே காரணம்: தந்தை குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிளிகொல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது மகள் பாத்திமா லத்தீப்(18). இவர் சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அவர் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று கொல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகள் தற்கொலை செய்த விவரத்தை அறிந்த உடன் நான், கொல்லம் மேயர் ராஜன்பாபு உட்பட சிலர் சென்னை சென்றோம். மருத்துவமனையில் ஆஸ்டல் வார்டன் தவிர ஆசிரியர்களோ மாணவர்களோ யாரும் வரவில்லை. எனது மகளுடன் படித்த மாணவர்களும் ஆசிரியர்களும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்து எந்த விபரத்தையும் கூற மறுத்தனர். பாத்திமாவின் செல்போனை போலீசார் எடுத்து வைத்துக் கொண்டனர். நாங்கள் கட்டாயப்படுத்திய பின்னரே சிறிது நேரம் செல்போனை எங்களிடம் தந்தனர். அதில் பார்த்தபோது ஆசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் தனது சாவுக்கு காரணம் என்று என் மகள் குறிப்பிட்டிருந்தார். அவர் எனது மகளை மனரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார். எனவே சுதர்சன் பத்மநாபனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. இது தொடர்பாக மத்திய மனித வளத்துறைக்கு நாங்கள் புகார் கொடுக்க தீர்மானித்துள்ளோம். என் மகள் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமின்றத்தை அணுகுவோம். செல்போனில் உள்ள தகவல்களை போலிசார் அழித்துவிடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். கடந்த ஆண்டு சென்னை ஐஐடியில் கொல்லத்தை சேர்ந்த ஒரு மாணவர் உட்பட 6 மாணவர்கள் தற்கொலை செய்தனர். அதற்கு முன்பும் 2 ஆண்டுகளில் 7 மாணவர்கள் இறந்துள்ளனர். ஆசிரியர்களின் மன ரீதியான கொடுமைதான் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம். ஆனால் ஆசிரியர்களை காப்பாற்றும் முயற்சியில் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். என் மகள் உடலை வாங்க சென்றபோது தமிழக போலீசார் எங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். மகள் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க கோரி பிரதமர் மோடிக்கு இ மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளோம். ேகரள முதல்வரிடம் நேரடியாக புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : student suicide ,IIT Chennai ,IIT Chennai: Student Suicide , Professor blamed, student,suicide,IIT Chennai
× RELATED சில்லி பாயின்ட்…