பெங்களூரு: யூ டியூப் பிராங் வீடியோவுக்காக பேய் போல் வேடமிட்டு நள்ளிரவில் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை பயமுறுத்திய புள்ளிங்கோ 7 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ரயில் நிலையம் மற்றும் ரயில்வே கேட் அருகே தனியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் கார், பைக்கில் தனியாக செல்பவர்களிடம் சில வாலிபர்கள் பேய் மற்றும் பைத்தியம், சைக்கோ போன்று வேடமிட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளனர். இதனால் ஏராளமானவர்கள், இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லமுடியாமல் பயத்தில் நடுங்கினர். இதுகுறித்து புகார்கள் போலீசாருக்கு சென்றது. போலீசார் இச்சம்பவம் குறித்து கண்காணித்து விசாரணையில் இறங்கினர்.
இந்நிலையில் போலீசார் இரவு ரோந்து பணியின்போது, பொதுமக்களை ேபய் வேடமிட்டு பயமுறுத்தி வந்த 7 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. யு-டியூப் சேனலுக்காக வித்தியாசமாக ஏதாவது செய்து தங்கள் சேனலை டிரெண்டிங் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மாணவர்கள் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிராங் வீடியோவுக்காக பெங்களூரு மக்களை கதி கலங்க செய்த புள்ளிங்கள என்ன சொல்றதுன்னே தெரியல என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.