ஜோலார்பேட்டை: தந்தையின் உடல்நிலை, சகோதரி மகள் திருமணத்துக்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்த பேரறிவாளனை ஆனந்த கண்ணீருடன் தாய் அற்புதம்மாள் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். வேலூர் சிறையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற சென்னை புழல் சிறைக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனின் சிகிச்சைக்காகவும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவருக்கு தமிழக அரசு ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று காலை 6.15 மணியளவில் புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மதியம் 12.20 மணியளவில் பழைய ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். அங்கு அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். இதையொட்டி திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜோலார்பேட்டை பழனி, குற்றப்பிரிவு புனிதா, எஸ்ஐ அருள் மற்றும் போலீசார், பேரறிவாளன் வீட்டைச்சுற்றிலும் 3 தெருக்களில் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘பரோலில் வரும் கைதிகள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மற்றபடி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஆனால், பேரறிவாளனுக்கு 23, 24ம் தேதி திருமண நிகழ்ச்சி மற்றும் தந்தையை மருத்துவமனை அழைத்து செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார்’ என்றனர்.