ஆலந்தூர்: மடிப்பாக்கத்தில் தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (61). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 9ம் தேதி மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு காலணிகளை வைக்கும் இடத்தில் சாவியை மறைத்து வைத்துவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அன்றிரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு 18 பவுன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் முகமது ஆசிப் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆசாமியை தேடி வருகின்றனர்.