×

மாணவன் கொலையில் தேடப்பட்ட சென்னை ரவுடி தேனியில் சரண்

சென்னை: பாலிடெக்னிக் மாணவர்  முகேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி  செல்வம், தேனி ஜே.எம்.கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். காஞ்சிபுரம்  மாவட்டம், செங்கல்பட்டு அருகே பெருநாத்தநல்லூரில் பாலிடெக்னிக் மாணவர்  முகேஷ் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இச்சம்பவத்தில் சக மாணவரான விஜய் என்பவரை, போலீசார் கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். விசாரணையில் மாணவர் விஜய் தரப்புக்கும், இதேபகுதியை  சேர்ந்த ரவுடி செல்வம் தரப்புக்கும் தொடர்பு இருந்துள்ளது. ரவுடி செல்வம்  கோஷ்டியில் மாணவர் முகேஷை சேரச் சொல்லியபோது முகேஷ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில்  முகேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிய வந்துள்ளது.

இதில் மாணவரை  கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி யாருடையது என விசாரித்ததில், ரவுடி  செல்வத்தின் துப்பாக்கியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை  நடத்தி வந்தனர். மாணவர் முகேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி செல்வம் (35) தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை  நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். இவரை வரும் 18ம் தேதி  வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு போலீசாருக்கு, நீதித்துறை நடுவர்  பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி செல்வம் தேனி மாவட்ட சிறையில்  அடைக்கப்பட்டார்.

Tags : Charan ,Chennai Rowdy ,Student ,murder ,Chennai Rowdy Saran , Student Murder, Chennai Rowdy, Theni
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...