தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம், தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது, இரவு நேர விமான சேவை, தூத்துக்குடியில் இருந்து சென்னை தவிர பிற முக்கிய பகுதிகளுக்கும் விமான சேவையை இயக்குவது, சரக்கு போக்குவரத்து விமான சேவை, கூடுதலாக நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் இயக்குவதற்காக விரிவாக்கப் பணிகள் முடிந்து விட்டன. விமான நிலையம் அருகேயுள்ள வல்லநாடு மலையில் எச்சரிக்கை விளக்கு அமைப்பதற்காக வனத்துறை ஒப்புதல் பெற்ற பின்னர் அந்த பணி முழுமையடையும். அதனை தொடர்ந்து இரவு நேர விமானங்கள் இயக்கப்படும். இந்த பணிகள் இன்னும் 4 மாதங்களில் முடியும்.
ரன்வேயை 3,115 மீட்டர் அளவிற்கு நீளப்படுத்தவும், புதிய விமான முனையம் அமைப்பதற்காகவும் ₹380 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களை இயக்கி 600 பயணிகள் வரை புறப்பாடு செய்ய முடியும். இந்த பணிகள் முடிந்த பின் இங்கிருந்து கொச்சி, மும்பை, ஐதராபாத், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.