திருவனந்தபுரம்: கொச்சி மரடில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் ஜனவரி 11, 12 தேதிகளில் இடிக்கப்படுகிறது.கேரள மாநிலம் கொச்சி மரடில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் இங்கு வசித்த 350க்கு மேற்பட்ட குடும்பத்தினர் காலி செய்து சென்றனர்.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கேரள தலைமை செயலாளர் டோம் ஜோஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பை எப்படி இடிப்பது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின் தலைமை செயலாளர் டோம் ஜோஸ் கூறியதாவது: 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் ஜனவரி 11, 12 தேதிகளில் இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், அடுத்தநாள் 2 குடியிருப்புகளும் இடிக்கப்படும். 200 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். அருகில் உள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.