விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே போலீசாரின் வாகன சோதனையின்போது பைக்கிலிருந்து கீழே விழுந்து மூதாட்டி பலியான நிலையில், இதற்கு காரணமான எஸ்ஐ வேல்முருகன் உள்ளிட்ட 5 பேரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் டிஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உலங்காத்தான் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(28). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது தாய் அய்யம்மாளை (60) பைக்கில் கடலூர் மாவட்டம் மாளிகைமேடு, மேலாகுறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே, எஸ்ஐ வேல்முருகன், சிறப்பு எஸ்ஐ மணி, ஏட்டுக்கள் சந்தோஷ், செல்வம், இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை செந்திலிடம் பைக்கை நிறுத்துமாறு திடீரென கைகாட்டியுள்ளனர். அவர் பைக்கை நிறுத்தியபோது எதிர்பாராதவிதமாக அய்யம்மாள் சாலையில் விழுந்து பலியானார். போலீசார் தாக்கியதில் தான் அய்யம்மாள் நிலைதடுமாறி விழுந்து இறந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ உள்ளிட்ட 5 பேைரயும் ஆயுதப்படைக்கு இடமாற்றம்செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக பொதுமக்களுடன் அரசியல் கட்சியினரும் மூதாட்டி சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று டிஐஜி சந்தோஷ்குமார், வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ வேல்முருகன், சிறப்பு எஸ்ஐ மணி, ஏட்டுக்கள் செல்வம், சந்தோஷ், இளையராஜா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.