×

அலுவலர் பட்டியலை 5 நாளுக்குள் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

* உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலை 5 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் வாக்கு பதிவுக்கு 5 வண்ண வாக்குசீட்டு பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களில் செலவு கணக்கை தாக்கல் செய்வது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை நவம்பர் மாத இறுதியில் வெளியிட்டு டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலை 5 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது : உள்ளாட்சி தேர்தலில் நகர்புறங்களில் 600க்கு மேற்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 1800க்கு மேற்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாற்றுவர். கிராம புறங்களில் 900க்கு மேற்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாற்றுவார்கள். நகர்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிகளுக்கு 4 பேரும், கிராமபுறங்களில் 7 முதல் 8 பேரும் பணியாற்றுவார்கள். இதன்படி பார்த்தால் உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 6.5 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

இவர்களின் பட்டியலை வரும் 5 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிர்த்து வருவாய் துறை உள்ளிட்ட அரசின் மற்ற துறை அலுவலர்கள் விருப்பத்தை கேட்டு உடனடியாக பட்டியலை இறுதி செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய திட்டம்


உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக காவல் துறை அதிகாரிளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ேநற்று ஆலோசனை நடத்தினார். இதில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகள் இடமாற்றம், தேர்தல் பாதுகாப்புக்கு எத்தனை அதிகாரிகள் தேவை என்பது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


Tags : State Election Commission , State Election Commission, officer list,5 days
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு