×

பொள்ளாச்சி அருகே அட்டகாச யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி கொன்றது. மேலும், ரோட்டில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த திருமாத்தாள் என்ற மூதாட்டியை தாக்கியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அர்த்தனாரிபாளையம் பகுதி பொதுமக்கள், நேற்று வால்பாறைரோடு நா.மூ.சுங்கம் பகுதியில் பல மணிநேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அர்த்தனாரிபாளையம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடித்து வரகளியார் அடர்ந்த காட்டில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர். இதில் டாப்சிலிப்பில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில் இருந்து கலீம் மற்றும் பாரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் அர்த்தனாரிபாளையம் கிராமத்துக்கு இன்று அதிகாலை வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மீண்டும் அந்த ஒற்றை யானை அர்த்தனாரிபாளையம் கிராம பகுதிக்கு வந்துள்ளது. அதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின் அந்த யானை குண்டுவருட்டி பள்ளம் என்ற இடத்திற்கு சென்றது. ஆனால் அடர்ந்த காட்டிற்குள் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டது.

இந்நிலையில், அட்டகாசம் செய்யும் யானை தோட்டப்பகுதி மற்றும் ஊருக்குள் வருவதை தடுக்க, 100க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரும் இணைந்து தனித்தனி வாகனங்களில் ரோந்து செல்வதை தொடர்ந்துள்ளனர். இதில் ஒரு வாகனத்தில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம், ஓய்வுபெற்ற வனச்சரகர் தங்கராஜ், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.

தற்போது முகாமில் இருந்து வரழைக்கப்பட்ட கலீம் மற்றும் பாரி என இரு கும்கிகளையும், அர்த்தனாரிபாளையம் அருகே பெருமாள் மலையாடிவாரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளது. காட்டு யானை எந்த பகுதியில் உலா வருகிறது, அதனை எவ்வாறு  பிடிப்பது என வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அட்டகாச யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர்  மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரிசி யானை:
பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையம் மற்றும் பருத்தியூர் பகுதியில் கடந்த சில வாரமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டுயானை, தோட்டங்களில் புகுந்து தென்னை மற்றும் வாழைகளை  நாசப்படுத்துவதுடன், அங்குள்ள தோட்டத்து சாலைகளை இடித்து விடுகிறது. பின்னர் சமையல் அறையை உடைத்து அங்கிருக்கும் ரேஷன் அரிசியை எடுத்து சாப்பிட்டு சென்றுள்ளது. இதனால் தற்போது அந்த அட்டகாச காட்டு யானைக்கு, அப்பகுதி பொதுமக்கள் அரிசி யானை என பெயரிட்டுள்ளனர்.


Tags : Gumki ,Pollachi ,Forest Department Kumki , Pollachi, Attakasa, Elephant, catch, Kumki Elephants, Revenue, Forest
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு