- சாஹி பேசுகிறார்: திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை திருவள்ளுவரிலிருந்து
- தமிழ்நாடு
- சென்னை உயர் நீதிமன்றம்
- ராமானுஜர்
- தலைமை நீதிபதி
- அறிவுஜீவிகள்
சென்னை: திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை பெரும் மேதைகள் உருவாகிய இடம் தமிழ்நாடு என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமானி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பின் அங்கு செல்ல மறுத்த அவர், தனது பதவியை ராஜினாமாவும் செய்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அக்டோபர் 30ம் தேதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் நீதிபதிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த புதிய தலைமை நீதிபதி சாஹிக்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சாஹி, சட்டமும் இலக்கியமும் கைகோர்த்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சென்னையில் இருப்பதை சொந்த குடும்பத்தில் இருப்பதைப் போன்று உணர்கிறேன். நாகரிகம் பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழ்நாடு பெரும் பங்காற்றியுள்ளது. திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை பெரும் மேதைகள் உருவாகிய இடம் தமிழ்நாடு. இந்திய நாட்டின் அடித்தளத்தை அமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது. சாதாரண பொதுமக்களுக்கு நீதி நிர்வாகம் தற்போது அதிகம் தேவைப்படுகிறது. வழக்கறிஞர்களின் திறமையான வாதம் தான் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று கூறியுள்ளார்.