பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை விவசாயியை மிதித்து கொன்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நவமலை அடர்ந்த வனத்திலிருந்து வெளியேறும் காட்டு யானை ஆழியார் பகுதியில் சுற்றித்திரிவது வழக்கமாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அர்த்தனாரிபானைளயத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் யானை ஒன்று புகுந்தது. பின்னர், அங்கிருந்த தென்னை மரத்தை வேருடன் பிடுங்கி அட்டகாசம் செய்துள்ளது. சத்தம்கேட்டு, தோட்டத்தில் வசித்த விவசாயி ராதாகிருஷ்ணன்(45), டார்ச்லைட் அடித்தவாறு வெளியே வந்துள்ளார். அப்போது, எதிரே யானை நிற்பதையறிந்த அதிர்ச்சியடைந்து தப்பியோட முயன்றார். அதற்குள் யானை, அவரை துரத்தி துதிக்கையால் தள்ளிவிட்டு மிதித்து கொன்றது. யானையின் பிளிறல் சத்தம் கேட்ட ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் வந்து பார்த்தனர். அங்கு ராதாகிருஷ்ணன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கூட்டத்தை பார்த்ததும், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள மற்றொரு தோட்டத்தில் யானை புகுந்தது. இதன்பின் வனத்துறையினர் வந்து, ராதாகிருஷ்ணன் உடலை, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த திருமாத்தாள்(65), அங்குள்ள தோட்டத்தில் பால் கறக்க ரோட்டில் நடந்து சென்றுள்ளார். திடீரென தோட்டத்தில் நின்ற ஒற்றை யானை வெளியே வந்து, திருமாத்தாளை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர்காயமடைந்தார்.இத்தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, திருமாத்தாளை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோட்டூர் அரசு மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து, நா.மூ.சுங்கத்தில் மறியலில் ஈடுபட்டனர்.