×

அமெரிக்க காதலியுடன் திருப்புத்தூர் இளைஞர் திருமணம்: தமிழ் முறைப்படி நடந்தது

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர், அமெரிக்க பெண்ணை காதலித்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே தட்டடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்குச் சென்றார். அங்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த எலிசபெத் என்ற  இளம்பெண்ணுடன் கந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருப்புத்தூரில் உள்ள கந்தசாமியின் வீட்டிற்கு எலிசபெத் சில மாதங்களுக்கு முன் வந்தார். அவருக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதற்கு இரு வீட்டாரும் சம்மதம்  தெரிவித்தனர். 5 நாட்களுக்கு முன்பு கந்தசாமியின் தட்டடி கிராமத்துக்கு எலிசபெத் வந்தார். கந்தசாமியை திருமணம் செய்வதற்காக தனது பெயரை அன்புக்கரசி என்று மாற்றிக் கொண்டார்.  இதனையடுத்து, அங்குள்ள சமுதாயக் கூடத்தில்  தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அன்புக்கரசியாக மாறிய எலிசபெத் கூறுகையில், ‘‘எனக்கு தமிழ்ப் பாரம்பரியம் மிகவும் பிடித்துள்ளது.   அதனை மிகவும் விரும்புகிறேன். அதனால் தமிழக முறைப்படி திருமணம் செய்ய இந்தியா வந்தேன். எனது  கணவரின் உறவினர்களை  மிகவும் பிடித்துள்ளது’’ என்று தெரிவித்தார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் பெண் வீட்டார் சார்பில் விரைவில் நடைபெற உள்ளது.



Tags : American ,Girlfriend, Thirupputhur, Youth Marriage
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி