லக்னோ: அயோத்தியில் மசூதி கட்ட அரசு வழங்க உள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து சன்னி வக்பு வாரியம் வரும் 26ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய 2.77 நில வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. அதில், 2,77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை வழங்கும்படியும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இது குறித்து உ.பி சன்னி வக்பு வாரிய தலைவர் ஜூபைர் பரூக்கி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இதை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் திட்டம் எங்களுக்கு இல்லை. சன்னி வக்பு வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதி கட்டுவதற்கு அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாபர் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை ஏற்க கூடாது என சிலர் கூறுகின்றனர். இது எதிர்மறையான விஷயத்தை அதிகரிக்கும் என நினைக்கிறேன். நிலத்தை வக்பு வாரியம் எடுத்துக் கொண்டு மசூதியுடன் கூடிய கல்வி நிலையம் அமைக்கலாம் என சிலர் ஆலோசனை கூறுகின்றனர். இந்த நிலத்தை ஏற்பதா? வேண்டாமா? என பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.